வெள்ளி, 30 நவம்பர், 2012

பெட்ரோல் குண்டு வீசியதால் ரவுடிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்: டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் பேட்டி

சிவகங்கை, டிச. 1-

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின்சுதன், கடந்த அக்டோபர் மாதம் 27-ந்தேதி ரவுடிகளால் குத்திக்கொலை செய்யப்பட்டார். மருதுபாண்டியர் நினைவு தின நிகழ்ச்சிக்கு சென்ற சிலர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாச்சேத்தி அருகே உள்ள வி.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரவுடிகள் பிரபு, பாரதி, முத்துக்குமார் உள்பட 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பாரதி உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளான பிரபு உள்பட சிலர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதில் பிரபு, பாரதி உள்பட சிலர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் பிரபு மற்றும் பாரதியை மற்றொரு வழக்கில் மற்றொரு வழக்கு விசாரணைக்காக மதுரை சிறையில் இருந்து போலீசார் சிவகங்கை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.

மதுரை கே.கே.நகர் பகுதியில் அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு, தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இரவில் மானாமதுரை மேலமேல்குடி அருகே கால் பிரிவு தீத்தான்பேட்டை சாலையில் பிரபு, பாரதி இருவரும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அங்கு சென்ற போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையிலான போலீசார், இருவரையும் பிடிக்க முயன்றபோது, அவர்கள் தாக்கியதால் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரபு, பாரதி இருவரும் சுருண்டு விழுந்து இறந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன், சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கைதிகள் பிரபு மற்றும் பாரதியை தீண்டாமை வழக்கு விசாரணைக்காக, சிவகங்கை கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து சென்றனர். மதுரை கே.கே.நகர் பகுதியில் சென்றபோது, அவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியதால், போலீசார் வேனை நிறுத்தி உள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக பிரபு மற்றும் பாரதி, காவலுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், போலீஸ்காரர்கள் முத்தையா, சித்திரைவேல் ஆகியோரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். மானாமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீஸ் காரர்கள் பூமிநாதன், தினேஷ்குமார் ஆகியோர் மேலமேல்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தபோது, பிரபு மற்றும் பாரதி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் முயன்றபோது, இருவரும் பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர்.

மேலும் அரிவாளாலும் வெட்டியதில், சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்து அங்கு வந்த துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையிலான சிறப்பு படை, பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பிரபு, பாரதி இருவரும் குண்டு பாய்ந்து விழுந்துள்ளனர். அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் மானாமதுரை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பிரபுவின் சொந்த ஊரான வி.புதுக்குளத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய போலீசார் சிவகங்கை மாவட்டத்தில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பிரபு மீது கொலை முயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள் திருப்பாச்சேத்தி, சிவகங்கை மற்றும் சிட்காட் போலீஸ் நிலையங்களில் உள்ளன. இதேபோல் பாரதி மீது 5 வழக்குகள் உள்ளன. இதனால் இவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரபுவின் மனைவிக்கு போலீசார் தகவல் கொடுத்த மறுநாளே துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது